கொரோனா அதிகரிக்கும் நிலையிலும் பாகிஸ்தானில் ஊரடங்கில் தளர்வு
By: Nagaraj Mon, 11 May 2020 09:36:30 AM
ஊரடங்கு தளர்வு... பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வரும் நிலையில் ஒரு மாதமாக நீடித்த வந்த ஊரடங்கு, தளர்த்தப்பட்டு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானில், 1,991 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது; 21 பேர் இறந்தனர். இதையடுத்து, பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 465 ஆக உயர்ந்துள்ளது.
இறந்தோர் எண்ணிக்கை 639 ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணத்தில், 11 ஆயிரத்து, 93 பேரும், சிந்து மாகாணத்தில், 10 ஆயிரத்து, 771 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தொற்று பரவலை தடுக்க பாகிஸ்தானில், கடந்த ஒரு மாதமாக, ஊரடங்கு அமலில் இருந்தது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கை பாகிஸ்தான் அரசு, தளர்த்தி உள்ளது.
இதற்கு பாகிஸ்தான் டாக்டர்கள், எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. முன்னாள் பிரதமர், அப்பாஸி கூறுகையில், ''கொரோனாவை எதிர்கொள்வது பற்றி, அரசுக்கு எந்த கொள்கையும் இல்லை. மக்கள் நலனில் அக்கறையும் இல்லை,'' என்றார்.