ராஜஸ்தானில் இன்று (ஜூலை 4) ஒரு நாள் மட்டும் 12 மணி நேரம் தளர்த்தப்படுவதாக அறிவிப்பு
By: vaithegi Mon, 04 July 2022 6:42:39 PM
ராஜஸ்தான் : ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த வாரம் தையல்காரர் கன்ஹையா லால் கொல்லப்பட்டதையடுத்து ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களை தொடர்ந்து உதய்பூரில் உள்ள ஏழு காவல் நிலையப் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் தற்போது அம்மாவட்டத்தில் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பி வருவதையடுத்து அந்நகரில் விதிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த ஊரடங்கு காலங்களில் மொபைல் இன்டர்நெட் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இப்போது தளர்வுக்கு பின் ஆய்வுகளை மேற்கொண்ட பிறகு அந்த சேவைகளை மீட்டெடுப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தாரா சந்த் மீனா அவர்கள் தெரிவித்துள்ளார்.
அதனால் இன்று (ஜூலை 4) காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கிட்டத்தட்ட 12 மணி நேரம் ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இத்தளர்வு காலங்களில் உதய்பூர் நகர மக்கள் தங்களது அத்தியாவசிய சேவைகளுக்காக வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் உதய்பூரில் சமீபத்தில் நடைபெற்ற படுகொலை சம்பவத்தில் ஈடுபட்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்குடன் தொடர்புடைய சில இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.