தமிழ்நாட்டில் 6 முதல் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன
By: vaithegi Mon, 12 June 2023 09:25:02 AM
சென்னை: தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்காக 1 முதல் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 29-ம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன் பின் ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்த நிலையில் , கோடை வெப்பத்தின் காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளி திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர். இதனையடுத்து ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் வெயிலின் தாக்கம் குறையாத நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதல்வர் மு.க. ஸ்டாலின் உடன் ஆலோசனை மேற்கொண்டு, பள்ளி திறப்பை மீண்டும் ஒத்திவைத்தார்.
இதனை அடுத்து அதன்படி 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12-ம் தேதியும் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற ஜூன் 14-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12- ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. முதல் நாளான இன்றே மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்களை வழங்க அரசு ஏற்பாடு செய்து உள்ளது.