தென்காசி மாவட்டத்தில் ஆகஸ்ட் 10ல் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை
By: vaithegi Mon, 08 Aug 2022 2:41:50 PM
தென்காசி : தமிழகத்தில் ஆடி மாதத்தில் பெரும்பாலும் கோவில்களில் திருவிழாக்கள் மற்றும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.அதன்படி ஒவ்வொரு ஆண்டும் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சங்கரன் கோவிலில் ஆடித்தவசு திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளுமே கொரோனா பரவலின் காரணமாக சங்கரன் கோவிலில் ஆடித்தவசு திருவிழா நடத்தப்படவில்லை. அதன்பின் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது திருவிழா நடைபெற இருப்பதால் பல ஊர்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆடித்தவசுத் திருவிழா கிட்டத்தட்ட 12 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். மேலும், இந்த திருவிழா கடந்த ஜூலை 31 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது மற்றும் ஆடித்தவசுத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத் திருவிழா இன்று நடைபெற்று கொண்டிருக்கிறது.
மேலும், இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித்தவசுத் திருவிழா வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால், தென்காசி மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த விடுமுறையை ஈடுகட்ட ஆகஸ்ட் 13 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஏதேனும் அரசு தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தால் அந்த தேர்வு வழக்கம் போல நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.