தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 86 பேருக்கு கொரோனா
By: vaithegi Fri, 24 Mar 2023 00:25:10 AM
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 4 மாதங்களாக கொரோனா பாதிப்பு சற்று கட்டுக்குள் இருந்த நிலையில், தற்போது மீண்டும் உயர தொடங்கியுள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் புதிதாக 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 517 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவில் இருந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 49 ஆக உள்ளது.
அதிகபட்சமாக கோவை மற்றும் கடலூரில் 13 பேருக்கும், சென்னை மற்றும் சேலத்தில் தலா 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் திருப்பூரில் 2 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஈரோடு, மதுரை, நாமக்கல், நாகை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. 500க்கு கீழே பதிவாகி வந்த நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு இன்று ஆயிரத்து 300-ஐ தாண்டி பதிவானது. இதனால் கொரோனா பரவல் உயர்ந்து வரும் தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.
இதனை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடதக்கது. அதிலும் குறிப்பாக கேரளாவில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.