இந்தியாவில் கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 933 பேர் உயிரிழப்பு
By: Karunakaran Sat, 08 Aug 2020 5:18:29 PM
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் நடமாட்டம் அதிகரித்ததாலும், கொரோனா பரிசோதனைகள் அதிகரித்ததாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நேற்று முன்தினம் 19.64 லட்சம் கடந்தது.
இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 62,538 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு இருந்தன. நாடு முழுவதும் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்து 27 ஆயிரத்து 75 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் நேற்று வரை 13 லட்சத்து 78 ஆயிரத்து 106 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா காரணமாக இதுவரை 41,585 பேர் உயிரிழந்து உள்ளனர். கடந்த 2 நாட்களுக்குள் ஒரு லட்சம் கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டில் கொரோனா பாதிப்புகளுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 61,537 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதால், மொத்த எண்ணிக்கை 20 லட்சத்து 88 ஆயிரத்து 612 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்புடைய 6 லட்சத்து 19 ஆயிரத்து 88 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 14 லட்சத்து 27 ஆயிரத்து 6 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், ஒரே நாளில் 933 பேர் பலியாகியுள்ளதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 42,518 ஆக உயர்வடைந்துள்ளது.