அமெரிக்காவில் நடு வானில் இரண்டு விமானங்கள் மோதி விபத்து - 8 பேர் உயிரிழப்பு
By: Karunakaran Tue, 07 July 2020 09:31:09 AM
அமெரிக்காவில் இடஹோ மாகாணம் ஸ்கூட்னை நகரில் மிகப்பெரிய ஏரி ஒன்று அமைந்துள்ளது. இந்த ஏரி பகுதியில் தண்ணீர் மற்றும் நிலம் என இரண்டிலும் தரையிரங்கும் வடிவமைப்பை கொண்ட சிறிய ரக விமானங்கள் அதிக அளவில் பயணங்கள் செய்து வந்தன.
இந்நிலையில் இந்த ஏரி பகுதியின் வான் பரப்பில் நேற்று இரண்டு சிறிய ரக விமானங்கள் சுமார் 900 அடி உயரத்தில் நடு வானில் பறந்து கொண்டிருந்தன. அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு விமானங்களும் நேருக்கு நேர் மோதியது.
இந்த விமானங்கள் நேருக்கு நேர் மோதியபின், அந்த ஏரிக்குள் விழுந்தன. இதுகுறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் இரண்டு விமானங்களிலும் இருந்த அனைவரும் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். ஆனால் இதில் 2 பேரின் உடலை மட்டுமே மீட்புப்படையினரால் கண்டுபிடிக்க முடிந்தது. மற்றவர்களின் உடலை கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.