இரண்டு வாரங்களில் கொரோனாவின் இரண்டாவது அலை உருவாகலாம் - போரிஸ் ஜான்சன்
By: Karunakaran Wed, 29 July 2020 5:56:41 PM
இங்கிலாந்தில் கடந்த வாரம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28 சதவிகிதம் அதிகரித்துள்ளது. தற்போது இன்னும் இரண்டு வாரங்களில் இங்கிலாந்தில் கொரோனாவின் இரண்டாவது அலை உருவாகலாம் என இங்கிலாந்து பிரதமர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உள் நாட்டிலும், வெளி நாடுகளிலும் ஆங்காங்கு கொரோனா பாதிப்பு உருவாகி வருவது பிரதமரை கவலையில் ஆழ்த்தியுள்ளதாக மூத்த அரசு அலுவலர் ஒருவர் கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைவுதான் என்றாலும், கடந்த ஏழு நாட்களில் பதிவாகியுள்ள கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஏப்ரலுக்குப் பிறகு அதிகம் பதிவான எண்ணிக்கை என கருதப்படுகிறது. கடந்த ஏழு நாட்களில் சரசரியாக 700 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது முந்தைய எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 28 சதவிகிதம் அதிகம்.
இங்கிலாந்து அமைச்சர்கள், இந்த குளிர்காலத்தில் கொரோனா இரண்டாவது அலை உருவாகலாம் என ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது அதற்கு முன்பாகவே, கொரோனா இரண்டாவது அலை உருவாகலாம் என அச்சம் எழுந்துள்ளது.
இந்நிலையில் போரிஸ் ஜான்சன், இங்கிலாந்து நாட்டவர்கள் பின்பற்றி வந்த பாதுகாப்பு நடைமுறைகளை விட்டுவிடக்கூடாது. தற்செயலாகக்கூட கொரோனா பரவ அனுமதிக்கக்கூடாது. விதிமுறைகளைப் பின்பற்றினால் மட்டுமே நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகளை நிகழ்த்த முடியும். ஐரோப்பாவின் ஒரு சில இடங்களில் கொரோனாவின் இரண்டாவது அலை உருவாகலாம் என்பதால் நாமும் கவனமாக இருப்பது அவசியம் என்று கூறினார்.