வேலூரில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் மரங்கள் முறிந்து விழுந்தன
By: Nagaraj Fri, 09 June 2023 7:43:42 PM
வேலூர்: வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சூறைக்காற்றால் மரங்கள் முறிந்து விழுந்தன.
இதேபோல் புதிய பேருந்து நிலையம், காட்பாடி, விருப்பாட்சிபுரம், பாகாயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த சூறைக்காற்றும், இடியுடனும் கூடிய கன மழை சுமார் 1 மணி நேரம் பெய்தது.
இந்த கனமழையின் காரணமாக ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலக பூங்காவில் சூறை காற்றின் காரணமாக மரங்கள் முறிந்து விழுந்தது. ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களின் மீது மரங்கள் முறிந்து விழுந்தன.
சூறைக் காற்றின் காரணமாக கொணவட்டம் பகுதியில் டிரான்ஸ்பார்மர் உடைந்ததால் மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
சூறைக்காற்றுடன் கூடிய மழையின் காரணமாக மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும் பாதுகாப்பான இடத்தில் இருக்கும்படியும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
காலை முதல் சுமார் 105 டிகிரியை கடந்து வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் தற்போது இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.