- வீடு›
- செய்திகள்›
- ரூபே கார்டு, பீம் செயலி பரிவர்த்தனைகளில் வங்கிகள் பிடித்த கட்டணங்களை திரும்ப அளிக்க வங்கிகளுக்கு வருமான வரித்துறை அறிவுறுத்தல்
ரூபே கார்டு, பீம் செயலி பரிவர்த்தனைகளில் வங்கிகள் பிடித்த கட்டணங்களை திரும்ப அளிக்க வங்கிகளுக்கு வருமான வரித்துறை அறிவுறுத்தல்
By: Karunakaran Mon, 31 Aug 2020 1:29:02 PM
டிஜிட்டல் பணப்பரிமாற்றம் மற்றும் பணமில்லா பொருளாதாரம் போன்ற எலக்ட்ரானிக் முறை பரிவர்த்தனைகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதனால் நிதிச்சட்டம் 2019-ல் புதிய பிரிவு ஒன்று இணைக்கப்பட்டது. இந்த சட்டம் அமலுக்கு வந்த பின்னர் ரூபே கார்டு மற்றும் பீம் செயலி போன்றவற்றின் மூலமான பரிமாற்றங்களும் எலக்ட்ரானிக் முறையாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் எலக்ட்ரானிக் முறைகளில் நடைபெறும் பணப்பரிமாற்றங்களுக்கு வங்கிகள் கட்டணம் வசூலித்து வருகின்றன. இதன் காரணமாக இந்த பரிமாற்றங்களில் மக்கள் நாட்டம் கொள்ளவில்லை. மேலும் இத்தகைய பரிமாற்றங்கள் குறைந்தன. தற்போது இந்த பரிமாற்றங்களை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் ரூபே கார்டு, பீம் செயலி மூலமான பரிவர்த்தனைகளுக்கு கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் வங்கிகள் பிடித்த மேற்படி கட்டணங்களை திரும்ப அளிக்குமாறு வருமான வரித்துறை வங்கிகளை அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், வருமான வரிச்சட்டம் 1961-ன் 269 எஸ்.யு. பிரிவின் கிழ் வரையறுக்கப்பட்டு உள்ள எலக்ட்ரானிக் முறை பரிமாற்றங்களுக்கு கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் பிடிக்கப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்ப செலுத்துமாறு வங்கிகள் அறிவுறுத்தப்படுகின்றன. மேலும் எதிர்காலத்திலும் இத்தகைய பரிமாற்றங்களுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது எனவும் கேட்டுக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.