மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
By: vaithegi Thu, 12 Oct 2023 10:45:21 AM
சென்னை: மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக திறந்து விடப்படும் நீர் கடந்த அக்டோபர்-10 ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்து வருவதால் பாசன நீர் திறப்பு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 13 ஆண்டுகளுக்கு பின்னர் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 32 அடிக்கு கீழ் குறைந்துள்ள நிலையில், பாசனத்திற்காக திறந்து விடப்படும் நீர் நிறுத்தப்பட்டு உள்ளதால், காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்தனர்.
இந்நிலையில் இன்று சேலம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,528 கனஅடியிலிருந்து 9,347 கன அடியாக அதிகரித்து உள்ளது எனவே மேட்டூர் அணை நீர்மட்டம் 31.31 அடியிலிருந்து 33.10 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணையில் நீர் இருப்பு 8.81 டிஎம்சி ஆகவுள்ளது. மேட்டூர் அணையில் பாசனத்திற்கு நீர் திறந்து விடப்படாத நிலையில் குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 500 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. பாசனத்திற்கு நீர் திறந்து விடாததால், டெல்டா விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.