அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக ஆக்ஸிஜன் வசதி அதிகரிப்பு
By: Monisha Mon, 28 Sept 2020 4:16:46 PM
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கூடுதலாக ஆக்ஸிஜன் வசதி அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள இந்நேரத்தில் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன் வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும். பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற ஏதேனும் அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையினை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சைக்கு வருபவர்களை நுரையீரல் பாதிப்பின்றி குணப்படுத்தவது எளிதாகும்.
தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கிராமப்புற மருத்துவ மனைகளிலும் தேவையான மருத்துவ உபகரணங்களுடன் தயார் நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் உத்தரவின் படி தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக்குகள் துவங்கப்பட உள்ளன.
தமிழகம் ஆக்ஸிஜன் உற்பத்தியில் மிகை மாநிலமாக திகழ்வதுடன் தேவைக்கு அதிகமான ஆக்ஸிஜனை அண்டை மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதுமான ஆக்ஸிஜன் வசதி செய்யப்பட்டுள்ளதுடன் கூடுதலாக ஆக்ஸிஜன் வசதி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கிராமப்புறங்களில் 30 படுக்கைகள் கொண்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஆக்ஸிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தமிழகம் முழுவதும் 40,000 படுக்கைகள் எண்ணிக்கையில் ஆக்ஸிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஆர்.டி. பி.சி.ஆர். பரிசோதனை ஒரு நாளுக்கு 90,000 எண்ணிக்கையில் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் பயனாக கோவிட் பரிசோதனையில் பிற மாநிலங்கள் தமிழகத்தை பின்பற்றுமாறு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார். இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.