வைகை அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை உயர்வு
By: vaithegi Tue, 22 Aug 2023 3:34:22 PM
தேனி : தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இது வடகரை, தென்கரை என்று இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. இடது கரையில் சிறுவர்கள் பூங்கா, பல்வேறு வகையான சிலைகள், செயற்கை நீரூற்று உள்ளிட்டவையும், வலது கரையில் இசை நீரூற்று, மாதிரி அணை வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் உள்ளன.
இதனை தூது நுழைவுக் கட்டணம் ரூ.5. மினி ரயிலில் பயணிக்க ரூ.6-ம், குழந்தைகளுக்கு ரூ.3-ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதேபோன்று பூங்கா நீர்த்தேக்கத்தில் உள்ள படகுகளில் ஒரு மணி நேரம் பயணிக்க இருவருக்கு ரூ.90 கட்டணம் பெறப்படுகிறது.அணையைச் சுற்றிப் பார்க்க காலை 6 முதல் மாலை 6 மணி வரையும், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் இரவு 8 மணி வரையும் அனுமதி உண்டு.
கோடை விடுமுறைக்குப் பின்பு கடந்த சில மாதங்களாகவே இங்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாகவே இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆவணி மாத முதல் முகூர்த்தம் தொடங்கியது. அன்று மாவட்டத்தில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன. நேற்றும் முகூர்த்த நாள் என்பதால் மண்டபகங்கள் மிகவும் களைகட்டின.
தேனி மாவட்டத்தைப் பொருத்தளவில் திருமணம், திருவிழா போன்றவற்றுக்கு வரும் உறவினர்கள் பலரும் வைகை அணை போன்ற இடங்களுக்கு வந்து செல்வது வழக்கமான ஒன்று.இதனால் கடந்த 2 நாட்களாகவே வைகை அணையில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகம் காணப்பட்டது. அணையின் பல்வேறு பகுதிகளைச் சுற்றிப் பார்த்ததுடன் குழந்தைகளைப் பூங்காக்களில் விளையாட வைத்தும் மகிழ்ந்தனர்.