பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
By: Monisha Thu, 19 Nov 2020 11:48:37 AM
பவானிசாகர் அணைக்கு கடந்த 4 நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணையாக விளங்கும் பவானிசாகர் அணை ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் நீர்பிடிப்பு உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
மேலும் பவானி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால்களுக்கும், காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலுக்கும் செல்கிறது. பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலை பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு கடந்த 4 நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95.74 அடியாக உள்ளது. அணையின் நீர்வரத்து 3,822 கன அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து 1,600 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. தற்போது பவானிசாகர் அணையில் 25.5 டி.எம்.சி. அளவு நீர் இருப்பு உள்ளது.