மழை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
By: Monisha Wed, 23 Sept 2020 2:48:12 PM
தென்காசி, குற்றாலம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக குற்றாலம் மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுந்தது. இரவிலும் தொடர்ந்து மழை பெய்தது.
இதனால் நேற்று காலையில் குற்றாலம் அருவிகளில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில் தண்ணீர் பாதுகாப்பு வளைவு தெரியாத அளவிற்கு ஆர்ப்பரித்து கொட்டியது. இதேபோல் ஐந்தருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கொரோனா காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு குற்றாலத்தில் குளிக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவியை ஓரமாக நின்று தண்ணீர் கொட்டும் அழகை ரசித்துச் சென்றனர். இந்த மழை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் பிரதான அணையான பாபநாசம் அணை 143 அடி உயரம் கொண்டது. இந்த அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 85.30 அடியாக இருந்தது. நேற்று 2.80 அடி உயர்ந்து 88.10 அடியாக உள்ளது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 384 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதனுடன் இணைந்த சேர்வலாறு அணை நீர்மட்டம் 95.47 அடியில் இருந்து 101.18 அடியாக உயர்ந்து உள்ளது. அதாவது ஒரே நாளில் நீர்மட்டம் 5.71 அடியாக உயர்ந்துள்ளது. இதேபோல் மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்து உள்ளது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 32 அடியாக உயர்ந்துள்ளது. வடக்கு பச்சையாறு மற்றும் நம்பியாறு அணைகளுக்கு நீர்வரத்து இல்லை.
தென்காசி மாவட்டத்தில் உள்ள குண்டாறு, அடவிநயினார் அணைகள் ஏற்கனவே நிரம்பி வழிகிறது. இந்த நிலையில் கடையநல்லூர் அருகே உள்ள கருப்பாநதி அணையும், கடையம் அருகே உள்ள ராமநதி அணையும் தற்போது நிரம்பி உள்ளன.