தலைநகர் டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா பரவல்: இதுவரை 650 பேர் பலி
By: Monisha Fri, 05 June 2020 09:52:46 AM
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் நாடு முழுவதும் பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளதால் தொற்று உறுதி செய்யப்படும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் ஊரடங்கு உத்தரவு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 77 ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் நேற்று மேலும் 1,359 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25,004 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 650 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு டெல்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.