மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: ஒரே நாளில் 105 பேர் பலி
By: Monisha Thu, 28 May 2020 10:01:07 AM
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். எனினும் நாடு முழுவதும் வைரஸ் உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பேர் சிக்கிய மாநிலமாக உள்ளது. மகாராஷ்டிரா தலைநகரான மும்பையிலும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 2190 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 56,948 ஆக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் 105 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1897 ஆக அதிகரித்துள்ளது என அம்மாநில சுகாதாரத் துறை மந்திரி ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார்.
மும்பை தாராவி குடிசைப்பகுதியிலும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,639 ஆக அதிகரித்துள்ளது.