இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பது ஒரு சோதனை நிகழ்வு அல்ல - உலக சுகாதார நிறுவனம்
By: Karunakaran Wed, 24 June 2020 11:50:38 AM
கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த சில நாட்களாக 14 ஆயிரம், 15 ஆயிரம் என்கிற அளவுக்கு தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று காலை நிலவரப்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 40 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் கொரோனா பலி எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
இது இந்தியாவின் சோதனையான காலமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இது இது இயல்பான ஒன்றுதான் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் அவசர கால திட்ட இயக்குனர் டாக்டர் மைக்கேல் ரேயான் கூறுகையில், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் இப்போது கொரோனா பரிசோதனைகளை அதிகரித்து இருக்கின்றன. ஆனால், கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போவதை ஒரு சோதனையான நிகழ்வாக கருத வேண்டாம். ஏராளமான மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளில் தொற்றுநோய் பரவல் அதிகரிப்பது இயல்பானதுதான் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், மத்திய கிழக்கு நாடுகளும், ஆப்பிரிக்க நாடுகளும் கூட இப்போது ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கைக்கு தங்கள் பங்களிப்பை செய்து கொண்டிருக்கின்றன. அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை என்பது நிச்சயமாக வேகம் எடுக்கிற நிலையில் தான் இப்போது உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலும் சரி, இறப்பிலும் சரி சில நாடுகள் அதிரடியாக ஏற்றம் கண்டு வருவதாகவும், சில நாடுகள் தொற்று பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாகவும், ஆனால் அந்த நாடுகளும் பொருளாதார, சமூக நடவடிக்கைகளை திறந்து விட்டுள்ளதால் திரும்ப தொற்று பரவல் அதிகரித்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.