கொரோனா தொற்றின் காரணமாக பிரேசிலில் அதிகரிக்கும் வேலை இழப்பு
By: Monisha Thu, 11 June 2020 09:39:57 AM
அமெரிக்காவை தொடர்ந்து பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கடுமையாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பெரும் வேலை இழப்புகளும் பிரேசிலில் அதிகரித்து வருகிறது.
பிரேசில் கொரோனா வைரஸ் தொற்றின் மையமாக தற்போது மாறியுள்ளது. பிரேசிலில் நாளுக்கு நாள் நோய்த் பாதிப்பின் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. இதுவரை பிரேசிலில் சுமார் 7 லட்சத்து 42 ஆயிரத்து 084 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 38,497 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே கொரோனா தொற்று காரணமாக பிரேசிலில் பெரும் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முக்கிய வணிகப் பகுதியான ரியோ டி ஜெனிராவில் ஆயிரக்கணக்கான உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகள் நிரந்தரமாக மூடும் நிலைக்குச் சென்றுள்ளதாகவும் இதன் காரணமாக மோசமான வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தொழிலாளர் நலவாரிய அமைப்புகள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ கொரோனா வைரஸைத் தடுக்கும் முயற்சிகளில் தோல்வி அடைந்துவிட்டார் என்று கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த சூழலில் பிரேசில் பொருளாதார இழப்பையும், வேலை இழப்பையும் சந்தித்து வருவது அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.