அதிகரிக்கும் பலி எண்ணிக்கை...புதைக்க இடமில்லாமல் திணறி வரும் பிரேசில்
By: Monisha Sat, 13 June 2020 5:14:36 PM
உலக அளவில் கொரோனா பாதிப்பு மாற்று உயிரிழப்பில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசில் இரண்டாவது இடம்பெற்றுள்ளது. பிரேசிலில் கொரோனா வைரஸால் ஒட்டுமொத்தமாக 8 லட்சத்து 29 ஆயிரத்து 902 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 41 ஆயிரத்து 901 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
பிரேசில் நாட்டின் மிகப்பெரிய மெட்ரோ நகரான சா போலாவோவில் கொரோனா உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து நாள்தோறும் நூற்றுக்கணக்கில் கொத்துக்கொத்தாக மக்கள் மடிகிறார்கள். இதனால் உயிரிழந்தவர்களைப் புதைக்க கல்லறைகளில் இடமில்லாமல் நகர நிர்வாகம் திக்குமுக்காடி வருகிறது.
இதனால் வேறு வழியின்றி சா போலாவில் உள்ள மிகப்பெரிய கல்லறையான விலா ஃபோர்மோசா கல்லறையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்டவர்களின் உடல்களைத் தோண்டி எடுத்துவிட்டு அந்த இடத்தில் கரோனாவில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து வருகின்றனர்.
இது குறித்து சா போலா மெட்ரோ நகர நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இறந்தவர்கள் உடல்கள் புதைக்கப்பட்ட இடம் தோண்டப்பட்டு அந்த இடத்தில் உள்ள எலும்புகள் ஒரு பிளாஸ்டிக் பையில் போடப்பட்டு அடையாளமிடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும். இந்த எலும்புகளை வைப்பதற்காகவே தனியாக 12 கன்டெய்னர்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த கன்டெய்னர்கள் 15 கல்லறைகளுக்கு அனுப்பி வைக்கப்படுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மிகப்பெரிய கல்லறையான விலா ஃபோர்மோசா கல்லறையில் ஏற்கெனவே அடக்கம் செய்யப்பட்டவர்களின் உடல்களைத் தோண்டும் பணிகள் நடந்து வருகின்றன.