கொரோனா வைரஸ் பாதிப்பின் உச்சத்தில் இந்தியா; ஒரே நாளில் 8,392 பேருக்கு தொற்று உறுதி
By: Monisha Tue, 02 June 2020 09:29:49 AM
உலக நாடுகள் முழுவதையும் கதிகலங்க செய்து வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் அதி தீவிரமாக பரவி வருகிறது. கடந்த சில தினங்களாக ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 24 மணி நேரத்தில் 8,392 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,90,535 ஆக உயர்ந்துள்ளது.
இதனால் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 9-வது இடத்தில் இருந்து, 7-வது இடத்துக்கு இந்தியா சென்றுள்ளது. இந்த விவரம் உலக சுகாதார நிறுவனத்தின் தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் 3 இடங்களில் முறையே அமெரிக்கா, பிரேசில், ரஷியா உள்ளன. அடுத்தடுத்த இடங்களில் இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளுக்கு பிறகு 7-வது இடத்தில் இந்தியா உள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அங்கு 67,655 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் 23,495 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் டெல்லியில் இந்த எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
மேலும் இதுவரை இல்லாத அளவில் 24 மணி நேரத்துக்குள் 230 பேரின் உயிரையும் கொரோனா பறித்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கையும் 5,394 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 93,322 ஆக உள்ளது. இந்த பாதிப்பில் இருந்து 48.19 சதவீதம் பேர், அதாவது 91,819 பேர் சிகிச்சையின் மூலம் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.