இந்தியா தடை விதித்த செயலிகள் தற்காலிகமாக முடக்கம் - கூகுள் நிறுவனம் அறிவிப்பு
By: Karunakaran Fri, 03 July 2020 12:53:20 PM
லடாக் எல்லையில் கடந்த 15-ஆம் தேதி இந்திய-சீன வீரர்களிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனால் எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என மத்திய அரசை பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.
சீன பொருட்களின் இறக்குமதியை தடை செய்யக்கோரி பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேசிய பாதுகாப்பு இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி மத்திய அரசு 59 சீன செயலிகளுக்கு தடை விதித்துள்ளது.
இந்நிலையில் அந்த செயலிகளை நடத்தும் சில நிறுவனங்கள், தாங்களாக முன்வந்து ‘கூகுள் பிளே ஸ்டோரில்’ இருந்து செயலிகளை விலக்கிக் கொண்டுள்ளன. இருப்பினும் வேறு சில செயலிகள், இன்னும் பிளே ஸ்டோரில் நீடித்து வருகின்றன.
இதுகுறித்து ‘கூகுள்’ நிறுவனம் கூறுகையில், இந்தியா தடை செய்துள்ள அந்த செயலிகளை பயன்படுத்த முடியாதவாறு தற்காலிகமாக முடக்கி உள்ளதாக தெரிவித்துள்ளது. இருப்பினும் அவை எந்த செயலிகள் என்று ‘கூகுள்’ நிறுவனம் இந்த தகவலும் தெரிவிக்கவில்லை.