லடாக் மோதல் தொடர்பாக இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை
By: Karunakaran Tue, 30 June 2020 10:33:32 AM
லடாக்கின் கிழக்கே உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15-ஆம் தேதி சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது. இருநாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் காரணமாக அங்கு பதற்றம் நிலவியது. இந்த மோதலில் இந்தியா தரப்பில் 20 வீரர்களும், சீனா தரப்பில் 35 பேரும் உயிரிழந்தனர்.
இந்த மோதல் காரணமாக இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இரு தரப்பிலும் எல்லையில் படைகள் குவிக்கப்பட்டதால், பதற்றமான சூழல் நிலவி வந்தது. இதனால் இந்தியாவில் முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இருப்பினும் போர் பதற்றத்தை தணிக்க இருதரப்பும் தொடர் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
இருநாட்டு ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்தில் கடந்த 22-ந்தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன்பின், எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இருதரப்பும் படைகளை திரும்ப பெற முடிவெடுக்கப்பட்டது. அதன்படி எல்லையில் இருந்து சீன படைகள் விலகி கொண்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவி, இந்திய பகுதிக்குள் முகாமிட்டு உள்ளதை செயற்கைக்கோள் படங்கள் உறுதி செய்துள்ளது. தற்போது மீண்டும் லடாக் மோதல் தொடர்பாக லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்தில் இன்று பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்த பேச்சுவார்த்தையில், எல்லையில் பதற்றத்தை தணிப்பது குறித்தும், படைகள் விலக்கலுக்கான வழிமுறைகளை இறுதி செய்வது குறித்தும் இருதரப்பும் ஆலோசனை நடத்தவுள்ளன.