உலகிற்கு திறன் மிக்க பணியாளர்களை வழங்கும் நாடு இந்தியா: பிரதமர் மோடி பெருமிதம்
By: Nagaraj Fri, 21 July 2023 8:34:41 PM
இந்தூர்: உலகிற்கு திறன்மிக்கப் பணியாளர்களை அதிகம் வழங்கும் நாடாக இந்தியா திகழ்கிறது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் நடைபெறும் ஜி20 நாடுகளின் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் அவர் காணொலி மூலம் உரையாற்றினார்.
அப்போது, திறன் வளர்ச்சி மற்றும் பகிர்வை உலகமயமாக்க இது சரியான நேரம் என்றார். மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் அவற்றின் செயல்முறையில் பணியாளர்கள் திறனை வளர்த்துக் கொள்ள மோடி அறிவுறுத்தினார்.
திறன், திறனாய்வு, திறன் மேம்பாடு ஆகியவையே எதிர்காலத்தில் பணியாளர்களின் தாராக மந்திரமாக இருக்க வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
கொரோனா காலத்தில் இந்தியாவில் சுகாதாரத் துறை மற்றும் பிறத் துறையின் முன்களப் பணியாளர்கள் சிறப்பாகப் பணியாற்றி அர்ப்பணிப்பு உணர்வை வெளிப்படுத்தியதாக பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.