- வீடு›
- செய்திகள்›
- ஒரு நாளுக்கு 4.5 லட்சம் கவச உடைகளை உற்பத்தி செய்கிறது இந்தியா; மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தகவல்
ஒரு நாளுக்கு 4.5 லட்சம் கவச உடைகளை உற்பத்தி செய்கிறது இந்தியா; மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தகவல்
By: Nagaraj Wed, 20 May 2020 3:36:23 PM
கொரோனா அச்சுறுத்தல் ஆரம்ப காலத்தில் கவச உடைகளை இறக்குமதி செய்து வந்த இந்தியா இப்போது நாள் ஒன்றுக்கு 4.5 லட்சம் கவச உடைகளை உற்பத்தி செய்கிறது என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு உயிரை பணயம் வைத்து மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க பிபிஇ கிட்டுகள் எனப்படும் கவச உடைகள் வழங்கப்படுகிறது.
இதில் முகக்கவசம், கண் கவசம், ஷூ கவர், கவுன் மற்றும் கை உறை ஆகியவை அடங்கும். இந்தியாவில் கொரோனா பரவரல் தொடங்கிய போது வெளிநாடுகளில் இருந்து இவை இறக்குமதி செய்யப்பட்டது.
ஆனால் இந்த இரண்டு மாதங்களுக்குள் நாளொன்றுக்கு 4.5 லட்சம் கவச உடைகளை இந்தியாவே உற்பத்தி செய்து வருகிறது. கடந்த மே 5ம் தேதி அன்று 52 நிறுவனங்கள் நாளொன்றுக்கு 2.06 லட்சம் கவச உடைகளை உற்பத்தி செய்தன. இரண்டு வாரங்களில் 600 நிறுவனங்களுக்கு அனுமதி அளித்து இந்த எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இம்மாத தொடக்கத்தில் சுகாதார பணியாளர்களுக்காக 2.22 கோடி பிபிஇ கிட்டுகளை மத்திய அரசு கொள்முதல் செய்தது. அவற்றில் 1.4 கோடி கவச உடைகள் உள்ளூர் தயாரிப்பாளர்களிடம் இருந்து பெறப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 80 லட்சம் கவச உடைகள் வெளிநாட்டில் இருந்து தருவிக்கப்பட்டன.
ஆந்திராவின் லக்காவரம் கிராமத்தைச் சேர்ந்த 200 பெண்கள் முகக்கவசங்கள், ஷூ கவர்கள் மற்றும் லேப் கோட்டுகளை மொத்தமாக தயாரித்து மாநில அரசுக்கு வழங்கி வருகின்றனர். ஒவ்வொரு நாளும், அவர்கள் 15,000 முகக்கவசங்கள், 6,000 ஷூ கவர்கள் மற்றும் 5,000 லேப் கோட்டுகளை உற்பத்தி செய்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.