- வீடு›
- செய்திகள்›
- கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த காலக்கெடு நிர்ணயித்த இந்திய அறிவியல் அகாடமி கடும் எதிர்ப்பு
கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த காலக்கெடு நிர்ணயித்த இந்திய அறிவியல் அகாடமி கடும் எதிர்ப்பு
By: Karunakaran Tue, 07 July 2020 2:13:49 PM
கொரோனா வைரசை தடுக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி உலகம் முழுவதும் நடைபெறுகிறது. இந்தியாவிலும் இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி நடக்கிறது. இந்நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்துடன் இணைந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது.
‘கோவேக்சின்’ எனப்படும் இந்த மருந்தை மனிதர்களிடம் பயன்படுத்தி பரிசோதிக்க 12 ஆஸ்பத்திரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தற்போது இதனை விரைவாக செய்து, ஆகஸ்டு 15-ந் தேதிக்குள் தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர ஐ.சி.எம்.ஆர். இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கு தற்போது இந்திய அறிவியல் அகாடமியும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட இந்திய அறிவியல் அகாடமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவை குணப்படுத்தும் தடுப்பூசியை உருவாக்கியதை வரவேற்கிறோம். அதை விரைவாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு வாழ்த்துகிறோம். ஆனால், விஞ்ஞானிகளை-குறிப்பாக, கொரோனா தடுப்பூசி கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளை கொண்ட எங்கள் அமைப்பு, ஐ.சி.எம்.ஆர். அறிவித்துள்ள ஆகஸ்டு 15-ந் தேதி காலக்கெடுவை சாத்தியமற்றதாக கருதுவதாக தெரிவித்துள்ளது.
மேலும் அதில், ஒரு கட்டத்தில் பெறப்பட்ட தகவல்கள் ஏற்க முடியாததாக இருந்தால், அடுத்தகட்ட ஆய்வை கைவிட வேண்டும். எனவே, இந்த காலக்கெடுவானது, அர்த்தமற்றதாகவும், முன்எப்போதும் இல்லாததாகவும் இருக்கிறது. இதில் அவசரம் காட்டுவது, தரத்தில் சமரசம் செய்து கொள்வதுடன், இந்திய மக்களிடம் எதிர்பாராத அளவுக்கு நீண்ட காலத்துக்கு பாதிப்பை உண்டாக்கி விடும் என்று கூறப்பட்டுள்ளது.