கொரோனா தடுப்பு மருந்தை கண்டறிய களம் இறங்கும் இந்திய நிறுவனங்கள்
By: Nagaraj Fri, 29 May 2020 10:46:15 PM
கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் களமிறங்கியுள்ள வெளிநாட்டு நிறுவனங்களுடனும் இந்திய நிறுவனங்கள் கைகோர்த்துள்ளன என முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய் ராகவன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதுகுறித்து மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய் ராகவன் கூறியதாவது:
கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் பெரிய நிறுவனங்கள் முதல் தனிப்பட்ட கல்வியாளர்கள் வரை பலரும் களமிறங்கியுள்ளனர்.
இந்தியாவில் மொத்தமாக 30க்கும் மேற்பட்ட குழுக்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதில் 20 குழுக்கள் சரியான வேகத்தில் பயணித்து வருகின்றன. உள்நாட்டிலேயே வைரசுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மறுபுறம் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் களமிறங்கியுள்ள வெளிநாட்டு நிறுவனங்களுடனும் இந்திய நிறுவனங்கள் கைகோர்த்துள்ளன. புதிய மருந்தை கண்டுபிடிப்பது என்பது மிகப் பெரிய சவாலாகும். நாம் எடுக்கும் முயற்சிகள் தோல்வியில் முடியும். ஆனால் நாம் தொடர்ந்து முயற்சிக்கவேண்டும், என்றார்.