கனடாவில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
By: Nagaraj Mon, 07 Dec 2020 09:41:51 AM
கனடா தலைமையிலான ஆலோசனை கூட்டத்தை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் புறக்கணித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி டெல்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டம் தொடர்பில் உலக நாடுகள் எதுவும் எந்த கருத்தும் சொல்லவில்லை.
ஆனால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மட்டும் இந்திய விவசாயிகளின் உரிமைகளை நிலைநாட்ட கனடா என்றுமே துணைநிற்கும். இந்தியாவில் நடக்கும் போராட்டச் சூழல் கவலையளிக்கிறது என கூறினார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, உள்நாட்டு விவகாரம் குறித்து தெளிவாக அறியாமல் அதில் கனடா தலையிடுவதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என கூறியது.
இந்த நிலையில், இன்று கனடா தலைநகர் ஒட்டாவாவில் வெளியுறவுத்துறை அமைச்சர்
பிராங்கோயிஸ்-பிலிப் ஷாம்பெயின் தலைமையில் நடைபெறவிருக்கும் கொரோனா தடுப்பு
குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரான
ஜெய்சங்கர் கலந்து கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.
ஏற்கனவே
திட்டமிடப்பட்ட சில நிகழ்வுகளின் காரணத்தாலும், நேரமின்மை காரணமாகவும்
இக்கூட்டத்தில் கலந்துகொள்ள இயலாது என கூறப்பட்டுள்ளது. ஆனால் விவசாயிகள்
போராட்டம் குறித்து கனட பிரதமரின் கருத்து காரணமாகவே இந்தியா
இக்கூட்டத்தினை புறக்கணித்ததாக கூறப்படுகிறது.