சொந்த கிராம மக்களுக்கு உணவு வழங்கிய ஓட்டப்பந்த வீராங்கனை டுட்டி சந்த்
By: Nagaraj Mon, 11 May 2020 10:46:30 AM
கிராம மக்களுக்கு உணவு... கொரோனாவால் உணவின்றி தவித்த தன்னுடைய சொந்த கிராம மக்களுக்கு உணவு வழங்கினார் ஓட்டப்பந்தய வீராங்கனை டுட்டீ சந்த்.
இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை டுட்டீ சந்த் 24. ஒடிசா மாநிலம் ஜஜ்பூரில் பிறந்த இவர், 2018ல் நடந்த ஆசிய விளையாட்டு 100, 200 மீ., ஓட்டத்தில் தலா ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஊரடங்கால் புவனேஸ்வரில் உள்ள இவர், தனது சொந்த கிராமத்தில் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உதவிட முடிவு செய்தார். இதற்காக மாநில அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று, சொந்த கார் மூலம் 1,000 உணவு பொட்டலங்களை எடுத்துச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார்.
இதுகுறித்து டுட்டீ சந்த் கூறியது:
ஊரடங்கால் எனது சொந்த கிராமத்தில் நிறைய பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு என்னால் முடிந்த சிறிய உதவிகளை செய்ய திட்டமிட்டேன். இதற்காக மாநில அரசிடம் சிறப்பு அனுமதி பெற்றேன். நான் வருவதை கிராம மக்களுக்கு முன்னதாகவே தெரிவித்துவிட்டேன்.
வீட்டிற்கு வந்த அவர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினேன். எங்கள் கிராமத்தில் சுமார் 5 ஆயிரம் பேர் உள்ளனர். இம்முறை 1000 பேருக்கு மட்டுமே உணவு வழங்க முடிந்தது. அடுத்த முறை 2000 பேருக்கு உணவு வழங்க முடிவு செய்துள்ளேன். இதனால் என் பெற்றோரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இவ்வாறு டுட்டீ சந்த் கூறினார்.