சிங்கப்பூரில் ஊரடங்கை மீறிய இந்திய மாணவிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு
By: Karunakaran Tue, 16 June 2020 2:26:12 PM
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் ஊரடங்கை கடைபிடித்து வருகின்றன. இதனால் உலகம் முழுவதும் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கொரோனா காரணமாக கடந்த ஏப்ரல் 7-ந் தேதியில் இருந்து ஜூன் 2-ந் தேதிவரை ஊரடங்கு அமலில் இருந்தது.
ஊரடங்கு அமலில் இருந்த நேரத்தில் 3 இந்திய மாணவர்கள், தாங்கள் தங்கி இருந்த வாடகை வீட்டுக்கு வேறு 7 இந்திய மாணவர்களை அழைத்து வந்து பொழுது போக்கியுள்ளனர். இதுகுறித்து புகார் எழுந்துள்ளது. இந்த செயல் ஊரடங்கு கட்டுப்பாட்டுகளை மீறிய செயலாகும்.
இதில் 9 மாணவர்களுக்கு ஏற்கனவே தலா ரூ.2 லட்சம்வரை அபராதம் விதிக்கப்பட்டது. இதில் இந்திய மாணவி புல்லார் ஜஸ்டீனா மட்டும் மீதி இருந்தார். இந்நிலையில் அவருக்கு நேற்று சிங்கப்பூர் கோர்ட்டு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
இதேபோல், சிங்கப்பூரில் ஊரடங்கின்போது, வெளியே சென்று தன்னுடைய நண்பரை சந்தித்தது போன்ற குற்றச்சாட்டுகளுக்காக ரேணுகா ஆறுமுகம் என்ற இந்திய வம்சாவளி பெண்ணுக்கு சிங்கப்பூர் கோர்ட்டு ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் வரை அபராதம் விதித்து உத்தரவிட்டது.