இந்திய வீரர்களை கொன்ற சீனாவை கண்டித்து கனடாவில் இந்தியர்கள் ஆர்ப்பாட்டம்
By: Karunakaran Wed, 24 June 2020 2:39:21 PM
கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15-ந்தேதி இரவில் இந்தியா - சீன ராணுவ வீரர்களுக்கிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் ஒரு அதிகாரி உள்பட 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த மோதல் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும், இந்த தாக்குதலுக்குப் பின் எல்லை பகுதியில் பதற்றம் அதிகரித்தது.
சீனாவின் இந்த அத்துமீறிய செயலுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர் மற்றும் எதிர்க்கட்சிகள் உள்பட பலர் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்திற்கு எதிராக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் எல்லையில் பதற்றத்தை தணிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், கனடாவில் உள்ள இந்திய சமூகத்தினர் எல்லையில் இந்திய வீரர்களை கொன்ற சீனாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். வான்கூவரில் உள்ள சீன தூதரக அலுவலகத்திற்கு வெளியே இந்திய தேசியக் கொடியை ஏந்தி வந்து போராட்டம் நடத்தினர்.
சீனாவைக் கண்டித்து முழக்கமிட்டு, சீனாவுக்கு எதிரான வாசகம் எழுதப்பட்ட அட்டைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இருநாட்டு ராணுவ அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் லடாக் எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற இந்தியாவும் சீனாவும் ஒப்புதல் அளித்து, உடன்பாடு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.