இந்தியா வெளியிட்ட அறிவிப்பு எங்களுக்கு மிகுந்த கவலை அளிக்கிறது - ஜாவோ லிஜியன்
By: Karunakaran Wed, 01 July 2020 12:28:17 PM
கடந்த 15ஆம் தேதி லடாக் எல்லையில் சீன-இந்திய ராணுவத்தினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்களும், சீன தரப்பில் 35 வீரர்களும் உயிரிழந்தனர். சீனாவின் இந்த அத்துமீறிய செயலுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த மோதலினால் எல்லையில் பதற்றம் நிலவியது.
சீன பொருட்களின் இறக்குமதியை தடை செய்யக்கோரி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் சீனாவுடன் தொடர்புடைய 59 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஜாவோ லிஜியன் இந்தியா வெளியிட்ட அறிவிப்பு எங்களுக்கு மிகுந்த கவலை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நிலைமையை ஆய்வு செய்து வருகிறோம். வெளிநாடுகளில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள சீன நிறுவனங்களிடம், சர்வதேச சட்டங்களையும், உள்ளூர் சட்டங்களையும், கட்டுப்பாடுகளையும் கடைப்பிடித்து நடக்குமாறு சீன அரசு எப்போதும் சொல்லி வருகிறது என்று கூறியுள்ளார்.
மேலும், சீன நிறுவனங்கள் உள்ளிட்ட சர்வதேச முதலீட்டாளர்களின் சட்டரீதியான உரிமைகளை உறுதி செய்வது இந்தியாவின் கடமை. இந்தியா-சீனா இடையிலான நடைமுறை ஒத்துழைப்பு, இருதரப்புக்குமே நல்லது. ஆனால், இதை செயற்கையாக சீர்குலைப்பது இந்தியாவின் நலனுக்கு ஏற்றதல்ல என்று ஜாவோ லிஜியன் தெரிவித்துள்ளார்.