Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் செல் முன்மாதிரி கார் சோதனை வெற்றி

இந்தியாவில் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் செல் முன்மாதிரி கார் சோதனை வெற்றி

By: Karunakaran Sun, 11 Oct 2020 3:09:01 PM

இந்தியாவில் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் செல் முன்மாதிரி கார் சோதனை வெற்றி

பெட்ரோல், டீசலை எரிபொருளாக கொண்டு இயங்குகிற கார்களில் இருந்து வெளியாகிற புகை, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதுடன், உலக வெப்பமயமாதலுக்கு காரணமாகவும் அமைகிறது. இதனால், மாற்று எரிபொருள் கொண்டு இயங்குகிற கார்களை உருவாக்க பல நாடுகள் முயற்சியில் இறங்கி உள்ளன. அதன்படி, அறிவியல், தொழில் ஆராய்ச்சி கவுன்சிலும், புனேயில் உள்ள கே.பி.ஐ.டி. டெக்னாலஜிஸ் நிறுவனமும் சேர்ந்து ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்ட பி.இ.எம். எரிபொருள் செல் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளன.

இந்த கார் பெட்ரோல், டீசல் போன்ற புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை நீக்குகிறது. இந்த தொழில்நுட்பம் தண்ணீரை மட்டுமே வெளியிடும். இதனால் தீங்கு ஏற்படுத்தும் பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றமும், மற்ற காற்று மாசுகளையும் குறைக்கிறது. இந்தியாவில் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் செல் முன்மாதிரி கார் சோதனையை சி.எஸ்.ஐ.ஆர். மற்றும் கே.பி.ஐ.டி.டெக்னாலஜிஸ் நிறுவனமும் கூட்டாக, வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளன.

india,hydrogen fuel,cell prototype car,testing ,இந்தியா, ஹைட்ரஜன் எரிபொருள், செல் முன்மாதிரி கார், சோதனை

பேட்டரியில் ஓடும் மின்சார காரை இந்த தொழில்நுட்பத்தால், மறுசீரமைத்து, அந்த காரின் சோதனை ஓட்டத்தைத்தான் இப்போது வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். சி.எஸ்.ஐ.ஆர். அங்கங்களான காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வுக்கூடமும், புனே தேசிய ரசாயன ஆய்வுக்கூடமும், பி.இ.எம். எரிபொருள் செல் தொழில்நுட்பத்தை புனே கே.பி.ஐ.டி. டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து மேம்படுத்தி உள்ளன.

ஹைட்ரஜன் எரிபொருள் செல் தொழில்நுட்பம் குறித்து கே.பி.ஐ.டி. டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் ரவிபண்டிட் கூறுகையில், இந்த தொழில்நுட்பத்துக்கு நல்லதொரு எதிர்காலம் உள்ளது. இதுவரை இல்லாத வகையில் இது வணிக ரீதியில் அதிக லாபம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார்.

Tags :
|