இந்தியாவின் இளைஞர்கள் உலகளாவிய தொழில்நுட்பத்தில் திறமையானவர்கள்
By: Nagaraj Thu, 17 Nov 2022 9:10:16 PM
பெங்களூரு: இந்தியாவின் இளைஞர்கள் உலகளாவிய தொழில்நுட்பத்தில் திறமையானவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர் என்று பிரதமர் மோடி பெருமிதப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற தொழில்நுட்ப மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
பல ஆண்டுகளாக இந்தியாவின் கண்டுபிடிப்பு குறியீட்டில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது. இந்தியாவின் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள் ஏற்கனவே உலகைக் கவர்ந்துள்ளன. இந்தியாவின் இளைஞர்கள் உலகளாவிய தொழில்நுட்பத்தில் திறமையானவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர்.
நமது திறமையை உலக நலனுக்காக பயன்படுத்துகிறோம். 2015 ஆம் ஆண்டில், புதுமையான நாடுகளின் பட்டியலில் இந்தியா 81 வது இடத்தில் இருந்தது. தற்போது 40வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தியாவில் யூனிகார்ன் நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் இரு மடங்காக அதிகரித்துள்ளது.
81,000 தொழிற்சாலைகள் அங்கீகாரம் பெற்றுள்ளன. இதன் மூலம், உலகின் மூன்றாவது பெரிய தொழில்மயமான நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் முதலீட்டாளர்கள் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கப்படுகிறார்கள். வறுமைக்கு எதிரான போரில் இந்தியா தொழில்நுட்பத்தை ஆயுதமாக பயன்படுத்துகிறது.
ஆதார் மற்றும் மொபைல் செயலி திட்டங்கள் ஏழை மக்களுக்கு உதவுகின்றன. இத்திட்டம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் அரசு நிதி செலுத்தப்படுவதை உறுதி செய்கிறது. அரசு இ-சந்தை இணையதளம் வெற்றிகரமாகச் செயல்படுகிறது. ஊழலுக்கான வழிகளை குறைத்து விட்டது.
இணையம் மூலம் ஒப்பந்தப் புள்ளிகளைக் கோரும் செயல்முறை வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கிறது. அரசு இ-காமர்ஸ் இணையதளம் மூலம் கடந்த ஆண்டு ஒரு டிரில்லியன் கொள்முதல் செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.