இண்டிகோ நிறுவனம் தனது ஊழியர்களில் 10 சதவிகிதம் பேரை பணி நீக்கம் செய்ய முடிவு
By: Karunakaran Tue, 21 July 2020 11:02:26 AM
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக, உள்நாட்டு மற்றும் பன்னாட்டு பயணிகள் விமான சேவை மிகமிகக்குறைவான எண்ணிக்கையில் செயல்படுகின்றன.
பெரும்பாலான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை அடைந்து வருகின்றன. விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக பெரும்பாலான ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு காரணமாக இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமாக இண்டிகோவும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது.
இண்டிகோ நிறுவனம் 23 ஆயிரத்து 500-க்கும் அதிகமான ஊழியர்களை கொண்டுள்ளது. ஊரடங்கினால் தனது ஊழியர்களில் பெரும்பாலானோருக்கு கட்டாய விடுப்பு வழங்கியுள்ளது. தற்போது இண்டிகோ நிறுவனம் நிலைமையை கட்டுப்படுத்த விமானிகள் உள்பட தனது ஊழியர்களில் 10 சதவிகிதம் பேரை (சுமார் 2 ஆயிரத்து 300 பேர்) பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவன தலைமை இயக்குனர் ரோனோஜாய் தத்தா கூறுகையில், கொரோனா வைரசால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளால் இண்டிகோ வரலாற்றில் முதல்முறையாக ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம் என்று கூறினார். தங்கள் நிறுவன விமானத்தில் பயணம் செய்யும் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பயணத்தொகையில் 25 சதவிகிதம் சலுகையை இண்டிகோ அறிவித்துள்ளதன் காரணமாக இண்டிகோ நிறுவனத்திற்கு இதுவரை 871 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.