கள்ளக்குறிச்சி வன்முறை விவகாரம் குறித்து அமைச்சர் கூறிய தகவல்கள்
By: Nagaraj Mon, 18 July 2022 10:53:24 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு நியாயம் கேட்டு நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்ட விவகாரத்தில், அமைச்சர் எ.வ.வேலு சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது.
இந்நிலையில், போராட்டம் நடைபெற்ற சின்னசேலம் பகுதியில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், எ.வ.வேலு, கணேசன் நேரடியாகச் சென்று ஆய்வு செய்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, "முன்னாள் மாணவர்கள் போராட்டம் என்ற பெயரில் கலவரம் நடத்தப்பட்டது. வெளியூரைச் சேர்ந்த பலரும் முன்னாள் மாணவர்கள் என்ற பெயரில் வன்முறை செய்துள்ளனர்.
வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டன.
மாணவி உயிரிழந்த மறுநாளே அமைச்சர் சி.வி. கணேசன் தாயாரைச் சந்தித்து ஆறுதல்
கூறினர். 3000க்கும் மேற்பட்ட மாணவர்களின் சான்றிதழ்கள்
எரிக்கப்பட்டுள்ளன. அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்று
திட்டமிட்டு கலவரம் நடைபெற்றுள்ளது. நீதி கேட்கப் போனவர்கள் மாணவர்களின்
சான்றிதழ், பேருந்துகளைக் கொளுத்தியது ஏன்?
எந்த அமைப்பாக
இருந்தாலும் அமைதியாகப் போராட்டம் நடத்தி இருக்க வேண்டும். போலீசார்
நடவடிக்கையால் துப்பாக்கிச் சூடு இல்லாமல் போராட்டம் கட்டுப்படுத்தப்பட்டு
உள்ளது. கலவரத்தில் ஈடுபட்டவர்களைக் கண்டறியக் குழு அமைக்கப்படும்.
கலவரத்தை முன்னின்று நடத்தியது யார் என்பதை அந்தக் குழு கண்டறியும். கலவரம்
தொடர்பான கைதுகளில் எவ்வித உள்நோக்கமும் இல்லை என்றார்.