பாதுகாப்பற்ற முறையில் நடந்த தேர்தல் 2020 ஜனாதிபதி தேர்தல் - டிரம்ப்
By: Karunakaran Tue, 01 Dec 2020 08:35:13 AM
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதை தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் ஏற்க மறுத்து வருகிறார். ஜோ பைடன் வெற்றி பெற்றதாக கூறப்படும் பல மாகாணங்களில் மறு வாக்கு எண்ணிக்கையை நடத்தி ஜோ பைடனின் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி டிரம்ப் பிரசார குழு சார்பில் அந்தந்த மாகாண கோர்ட்டுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளில் டிரம்ப் தரப்பு தொடர்ந்து பின்னடைவையே சந்தித்து வருகிறது. இந்நிலையில் விஸ்கான்சின் மாகாணத்தில் நடந்த மறு வாக்கு எண்ணிக்கையில் ஜோ பைடன் டிரம்பை விட அதிக வாக்குகள் பெற்று முன்னணியில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், நமது 2020 ஜனாதிபதி தேர்தல் மோசமாக மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் பாதுகாப்பற்ற முறையில் நடந்த தேர்தல் இதுவாகும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் மற்றொரு பதிவில் அவர், தேர்தலில் பெரிய அளவில் மோசடிகள் நடந்துள்ளன. இது அனைவருக்கும் தெரியும். ஒபாமாவை விட ஜோ பைடன் கருப்பின சமூகத்திடம் இருந்து அதிக வாக்குகளைப் பெறவில்லை என்பது அவர்களுக்கு தெரியும். நிச்சயமாக 8 கோடி வாக்குகளை அவர் பெறவில்லை. என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.