கேங்மேன் பணி தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வலியுறுத்தல்
By: Nagaraj Thu, 21 Sept 2023 2:28:58 PM
சென்னை: பணி நியமன ஆணை வழங்கணும்... தமிழ்நாடு மின் வாரியத்தின் கேங்மேன் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற 5 ஆயிரத்து 336 பேருக்கும் உடன் பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்ட அவர், கடந்த 2021ஆம் ஆண்டு மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, விடுபட்ட தேர்வாளர்களுக்கு பணி நியமனம் செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
2 ஆண்டுகள் கடந்தும், பணி நியமனம் செய்ய எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாததால், விரக்தியடைந்த தேர்வாளர்கள் கொளத்தூரில் உள்ள முதலமைச்சரின் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார்.
அரசுப் பணிகளில் காலியாக உள்ள மூன்றரை லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் எனக்கூறி தி.மு.க. ஆட்சிக்கு வந்ததாக அக்கட்சியின் தேர்தல் வாக்குறுதி எண் 187-ஐ அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார். 2 ஆண்டுகளாகியும் மின்வாரியத் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்யாமல் ஐந்தாயிரத்துக்கும் அதிகமான குடும்பத்தினர் வஞ்சிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.