நடமாடும் பரிசோதனை மையங்கள் மூலம் உடனடி கொரோனா பரிசோதனை...முதல்வர் தகவல்
By: Monisha Thu, 27 Aug 2020 12:25:43 PM
நடமாடும் பரிசோதனை மையங்கள் மூலம் நோய்த்தொற்று உடனடியாக கண்றியப்படுகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரானா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து நேரடியாக சென்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்திற்கு இன்று வருகை தந்த முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் ரூ.32.16 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல்நாட்டி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- "இந்தியாவிலேயே அதிக பரிசோதனை தமிழகத்தில்தான் நடைபெறுகிறது. கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் தமிழகத்தில் தான் அதிகம். தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் அதிக தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.495 கோடியில் கதவணை கட்டும் பணிகள் 40% நிறைவடைந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் சாலை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் 12,514 இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 1,554 மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.225 கோடி சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது. நாள்தோறும் 300க்கும் மேற்பட்ட காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நடமாடும் பரிசோதனை மையங்கள் மூலம் நோய்த்தொற்று உடனடியாக கண்றியப்படுகிறது" என்று கூறினார்.