சீன அதிபருக்கு பதிலாக வடகொரிய அதிபரின் உருவ பொம்மையை எரித்து பாஜகவினர் போராட்டம்
By: Karunakaran Tue, 23 June 2020 10:17:54 AM
லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15 ஆம் தேதி இந்திய-சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் வரை உயிரிழப்பு மற்றும் காயமடைந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மோதலால் இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்படும் அபாயம் உள்ளது.
சீனாவின் இந்த அத்துமீறிய தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதும் ந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு பகுதிகளில் சீன பொருட்களை சாலையில் போட்டு உடைத்தும், சீன அதிபரின் புகைப்படங்களை தீயிட்டு கொளுத்தியும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேற்கு வங்காளத்தை சேர்ந்த பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் சிலர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக போராட்டம் நடத்தினர். அப்போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பதிலாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உருவ பொம்மையை எரித்தனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவை சேர்ந்த ஒருவர் கூறுகையில், சீன பொருட்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். சீன பிரதம மந்திரி கிம் ஜாங் உன்னின் உருவ பொம்மையை எரித்து எங்கள் எதிர்ப்பை தொடர்ந்து வெளிப்படுத்துவோம் என்று கூறினார்.
தற்போது இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேற்குவங்காள பாஜகவினர் ஜி ஜின்பிங்கிற்கு பதிலாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பேசு பொருளாக அமைந்துள்ளது. பலரும் இது குறித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.