ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது குறித்து வரும் 15ம் தேதி வழிமுறைகள் வெளியீடு
By: Nagaraj Tue, 07 July 2020 3:11:42 PM
வரும் 15ம் தேதிக்கும் வழிமுறைகள்... 'மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வகுப்புகள் நடத்துவதை முறைப்படுத்துவது தொடர்பாக, வரும், 15ம் தேதிக்குள் வழிமுறைகள் வெளியிடப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
சென்னையை சேர்ந்த சரண்யா என்பவர் தாக்கல் செய்த மனுவில் பள்ளி மாணவர்களுக்கு, ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. மொபைல் போன், மடிக்கணினியை மாணவர்கள் பயன்படுத்துகின்றனர். அப்போது, ஆபாச இணைய தளங்களால் கவனம் சிதைவதற்கு வாய்ப்பு உள்ளது.
முறையான வழிமுறைகளை ஏற்படுத்தாமல், ஆன்லைனில் வகுப்புகள் நடத்த தடை விதிக்க
வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. வழக்கறிஞர் விமல் மோகன் என்பவர் தாக்கல்
செய்த மனுவில், 'ஆன்லைன் வகுப்புகளால், மாணவர்களுக்கு கண் பாதிப்பு ஏற்பட
வாய்ப்பு உள்ளது. அதனால், ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு,
இரண்டு மணி நேரம் மட்டும் வகுப்புகள் நடத்த உத்தரவிட வேண்டும்' என,
கோரியிருந்தார்.
இம்மனுக்கள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா
அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் சார்பில்,
மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜராகினர்.மத்திய
அரசு சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், ''ஆன்லைன்
வகுப்புகளை முறைப்படுத்துவது தொடர்பாக, உரிய வழிமுறைகளை, வரும், 15ம்
தேதிக்குள், மத்திய அரசு வெளியிட உள்ளது,'' என்றார்.
இதையடுத்து, விசாரணையை, வரும், 20ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.