கடலூரில் பயிர் சேத விவரங்களை கணக்கெடுக்கும் பணி தீவிரம்
By: Monisha Sun, 29 Nov 2020 1:45:14 PM
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறையின் மூலம் நிவர் புயல் சேத விவரங்கள் மற்றும் மறுசீரமைப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு பேசியதாவது:-
நிவர் புயல் காரணமாக கடந்த 25-ந் தேதி இரவு அதிகபட்சமாக கடலூரில் 282.2 மி.மீ. மழையும், சராசரியாக 120.57 மி.மீ. மழையும் பெய்துள்ளது. அப்போது முன்னெச்சரிக்கையாக கடலோர பகுதிகள் மற்றும் அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் உள்ள குடிசை வீடுகளில் வசித்த 17,186 குடும்பங்களை சேர்ந்த 52,226 மக்கள், மாவட்டத்தில் உள்ள 441 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டுள்ளனர்.
நிவர் புயலின் போது பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தில் 95 குடிசை வீடுகள் முழுமையாகவும், 642 குடிசைகள் பகுதியாகவும், 174 நிலையான வீடுகள் பகுதியாகவும், 5 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளது. மேலும் 94 ஆடுகள், 53 மாடுகளும், 6,300 வாத்துகள், 5,500 கோழிகளும் செத்துள்ளன.
இதுவரை கணக்கெடுக்கப்பட்டதில் 4,770 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல், மணிலா உள்ளிட்ட பயிர்களும், 200 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட காய்கறி வகை பயிர்களும் சேதமடைந்துள்ளன. தொடர்ந்து பயிர் சேத விவரங்களை கணக்கெடுக்கும் பணியில் 1,500 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அதனால் இன்னும் 2 நாட்களில் கணக்கெடுக்கும் பணி முடிவடைந்து விடும். பின்னர் அதன் அடிப்படையில் பயிர் சேதங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.