சிறு விவசாயிகள் பெற்றுள்ள கடனுக்கான வட்டி மே 31 வரை தள்ளுபடி; மத்திய அமைச்சர் தகவல்
By: Nagaraj Thu, 14 May 2020 6:37:35 PM
வட்டி தள்ளுபடி... சிறு விவசாயிகள் பெற்றுள்ள கடனுக்கான வட்டி மே 31ந் தேதி வரை தள்ளுபடி செய்யப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்றுமுன்தினம் இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது, பொருளாதாரத்தை மீட்கும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அமல்படுத்தப்படும் என அறிவித்தார்.
இதையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-
கடந்த 3 மாதங்களில் 3 கோடி விவசாயிகளுக்கு ரூ. 4. 22 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 1 முதல் ஏப்ரல் 30 வரை 86 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 63 லட்சம் கடன்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. சிறு விவசாயிகள் பெற்றுள்ள கடனுக்கான வட்டி மே 31ந்தேதி வரை தள்ளுபடி செய்யப்படுகிறது.
2 மாதங்களில் 25 லட்சம் புதிய கிசான் கிரெடிட் கார்டு வழங்கி ரூ 25 ஆயிரம் கோடி கடனுதவி தரப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் இருந்து 63 லட்சம் விவசாய கடன்கள் ரூ. 86 ஆயிரம் கோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முகாம்கள் அமைக்கவும் உணவு வழங்கவும் ரூ. 11, 000 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 12 ஆயிரம் சுய உதவிக் குழுக்கள் மூலமாக 3 கோடி முகக் கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
விவசாயிகளுக்கு மாநிய விலையில் தந்த கடனுக்கான வட்டியை செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற ஏழைகளை உள்ளடக்கிய 7, 200 புதிய சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நகர்ப்புறங்களில் வீடற்றவர்களை தங்கவைக்கும் முகாம்களில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 3 வேளை உணவு வழங்கப்பட்டுகிறது.