கொரோனா வைரஸ் எதிரொலி: சவுதியில் சர்வதேச விமான சேவை நிறுத்தம்
By: Monisha Tue, 16 June 2020 10:18:37 AM
உலகம் முழுவதையும் கதிகலங்க செய்து வரும் கொரோனா வைரஸ் சவுதி அரேபியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுதியில் இதுவரை 1,27,541 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 900க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். சவுதியில் அதிகபட்சமாக ரியாத்தில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் உள்ளது.
சவுதியில் வணிக நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இம்மாதம் முதல் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சவுதியில் சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கூறப்பட்டுள்ளதாவது:- கொரோனா வைரஸ் பரவல் குறித்து அடுத்தகட்ட அறிவிப்பு வரும் வரை சவுதியில் சர்வதேச விமான சேவை நிறுத்தப்படுகிறது. மேலும், சர்வதேச விமானங்களில் சவுதியைச் சேர்ந்தவர்களை அழைத்து வரும் விமானங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். மேலும், உள்நாட்டு விமான சேவை சில இடங்களில் அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதை மீறுவோருக்கு முதலில் 1000 ரியால் அபராதமும், அடுத்த முறையும் அதே தவறைச் செய்தால் இருமடங்கு அபராதமும் விதிக்கப்படும். 2-வது முறை இத்தவறை வெளிநாட்டினர் செய்தால் அபராதம் செலுத்துவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.