வரும் 10ம் தேதி அந்தமான், நிகோபர் தீவுகளுக்கு இணைய சேவை வசதி
By: Nagaraj Sat, 08 Aug 2020 08:20:37 AM
வரும் 10ம் தேதி தொடக்கம்... இந்தியாவில் இருந்து அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளுக்கு நீர்மூழ்கி ஃபைபர் ஆப்டிக் இணைப்பு மூலம் தொலைதொடர்பு மற்றும் இணைய சேவைகளுக்கான வசதி வழங்கப்பட உள்ளது.
அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளான ஸ்வராஜ் தீப், லிட்டில் அந்தமான், கர் நிகோபர், காமோத்ரா, கிரேட் நிகோபர், லாங் ஐலண்ட், ரங்கத் ஆகியவற்றுக்கு இந்த நீர்மூழ்கி கண்ணாடி இழை மூலமான இணைப்பு வழங்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து போர்ட் பிளேருக்கு இந்த இணைப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில் கடந்த 2018 டிசம்பரில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். ஆகஸ்ட் 10-ல் இந்த சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார்.
இந்த இணைப்பு மூலம் அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளுக்கும் இந்தியாவின்
பிற பகுதிகளுக்கும் இடையே அதிவேக மற்றும் நம்பகமான தொலைதொடர்பு மற்றும்
இணைய சேவை சாத்தியமாகும்.
சுமார் 2,300 கி.மீ. தொலைவுக்கு ரூ.1,224
கோடி முதலீட்டில் இந்த இணைப்பு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை
பிஎஸ்என்எல் நிறுவனம் செயல்படுத்துகிறது. இந்த நீர்மூழ்கி கண்ணாடி இழை
மூலம் சென்னையில் இருந்து போர்ட் பிளேருக்கு விநாடிக்கு 2X200 ஜிகா பைட்
வேகத்திலும் போர்ட் பிளேரில் இருந்து பிற தீவுகளுக்கு விநாடிக்கு 2X100
ஜிகா பைட் வேகத்திலும் சேவை வழங்கப்பட உள்ளது.
இதன்மூலம் இந்த
தீவுகளுக்கு 4ஜி அலைவரிசையில் அதிவேக சேவை கிடைக்க உள்ளது. இந்த இணைப்பு
மூலம் அரசு நிர்வாகம், கல்வி மற்றும் இணைய வர்த்தகம் ஆகியவையும் மேம்படும்.
சுற்றுலா சேவையும் அதிகரிக்கும். அதன்மூலம் வேலைவாய்ப்புகளும் உருவாகும்
எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.