ஹரியானாவில் 2 நாட்களுக்கு இணையதள சேவைகள் துண்டிப்பு
By: vaithegi Fri, 15 Sept 2023 3:50:17 PM
ஹரியானா : கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற கலவரத்தின் எதிரொலியாக 2 நாட்களுக்கு இணையதள சேவைகள் துண்டிப்பு ... ஹரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு நடத்திய ஊர்வலத்தின் போது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
இதனையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக உருவெடுத்தது. இக்கலவரத்தில் ஊர்க்காவல் படை வீரர்கள், பொதுமக்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். இக்கலவரத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் உடனடியாக 144 தடை உத்தரவை பிறப்பித்தது.
மேலும் அத்துடன் ஊரடங்கு உத்தரவையும் அமல்படுத்தி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. இந்த நூ மாவட்ட வன்முறை காரணமாக தற்போது காங்கிரஸ் எம்எல்ஏ மாமன் கான் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இந்த மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டது. கலவரம் தொடர்பாக இணையதளத்தில் பல்வேறு வதந்திகள் பரவுவதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.