அபுதாபியில் உள்ள வணிக வளாகத்தில் நவீன ‘ரோபோ’ காவலாளி அறிமுகம்
By: Karunakaran Wed, 02 Sept 2020 6:44:39 PM
புதிய தொழில்நுட்பங்கள் புதுமையாக அவ்வப்போது அமீரகத்தில் அறிமுகம் செய்யப்படும். இந்நிலையில் பிரமாண்டமான வணிக வளாகம் ஒன்றில் ‘ரோபோ’ காவலாளி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக வணிக வளாகங்களில் ‘செக்கியூரிட்டி கார்டு’ எனப்படும் காவலாளிகள் பணியமர்த்தப்பட்டு கண்காணிப்பு மற்றும் இதர பணிகளை செய்து வருகின்றனர்.
காவலாளிகள் செய்யும் பணிகள் அனைத்தையும் செய்யும் வகையில் தற்போது ‘ரோபோ’ காவலாளி பணியில் அமர்த்தப்பட்டுள்ளது. 4 சக்கரங்களுடன் வணிக வளாகத்தை சுற்றி வரும் இந்த ‘ரோபோ’ காவலாளி பொதுமக்கள் நடமாட்டத்தை மிக நுட்பமாக கண்காணிக்கிறது. இதன் முகபகுதியில் 7 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
யாராவது முக கவசம் அணியவில்லை என்றால் கண்டுபிடித்து விடுகிறது. யாராவது வழியை தவறவிட்டால் அந்த ‘ரோபோ’ முன் நின்று பேசினால் போதும் சரியான இடத்தை கூறி அனுப்பி வைக்கிறது. மேலும் இது பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை கண்காணித்து கட்டுப்படுத்துகிறது.
குறுக்கே யாராவது வந்தால் அல்லது தடைகள் இருந்தால் அவற்றை உணர்ந்து நகர்ந்து செல்லும் உணரும் கருவிகள் இந்த ‘ரோபோ’வில் பொருத்தப்பட்டுள்ளன. இது சந்தேகத்துக்கிடமான வகையில் கீழே பைகள், புகை, நெருப்பு, பள்ளம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும். யாஸ் மால் வணிக வளாகத்தில் தற்போது இந்த ‘ரோபோ’ காவலாளியை காண பலரும் வருகின்றனர்.