அபுதாபியில் ரிமோட் மூலம் இயங்கும் நவீன தீயணைப்பு வாகனம் அறிமுகம்
By: Karunakaran Sat, 13 June 2020 2:07:43 PM
போசன் நாட்டில் இருந்து அபுதாபி தீயணைப்புத்துறை புதிதாக ஒரு தீயணைப்பு வாகனத்தை வாங்கியுள்ளது. இது டி.ஏ.எப். 35 என்ற நவீன தானியங்கி தீயணைப்பு வாகனம் ஆகும். இதன் எடை 3,800 கிலோ ஆகும். இது ஒரு சிறிய வாகனம் போல உள்ளது. இதன் சக்கரங்கள் ராணுவ பீரங்கி வண்டியில் உள்ளது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் சக்கரங்கள் இரும்பினால் செய்யப்பட்டுள்ளது. இதனால் எவ்விதமான கரடுமுரடான பகுதிகளிலும் இது செல்லும். இதன் என்ஜின் டீசலால் இயங்கும். இது தானே நகர்ந்து செல்லும் வகையில் நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. தீ எரியும் இடத்தை உணர்ந்து தானாக நகர்ந்து சென்று தீயை அணைக்கும். இதன் பின் இணைப்பில் தண்ணீர் குழாயை இணைத்து விட்டால் மட்டும் போதும்.
மோட்டார் மூலமாக தண்ணீரை உறிஞ்சி, தீயை நோக்கி பீய்ச்சியடித்து தீயை சில நிமிடங்களில் முற்றிலுமாக அணைத்து விடும் அளவிற்கு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கம்பரசர் மோட்டார் மூலமாக இது தண்ணீரை பீய்ச்சி அடிக்கும். ஒரு நிமிடத்தில் 1,500 லிட்டர் முதல் 4 ஆயிரத்து 500 லிட்டர் தண்ணீரை 200 அடி தொலைவுக்கு இது பீய்ச்சியடிக்கும் தன்மை கொண்டது.
1,640 அடி தொலைவுக்கு முன்னும் பின்னும் நகர்ந்து இதனால் பணிபுரிய முடியும். ரிமோட் கன்ட்ரோல் மூலமாக இதனை தொலைவில் இருந்தே இயக்கலாம். அபுதாபியில் உள்ள சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இந்த வாகனம் பயன்படுத்தப்பட்டது. மிக துரிதமாக செயல்பட்டு சில நிமிடங்களில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக அபுதாபி தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.