கொரோனா வைரஸ் குறித்து கூடிய விரைவில் விசாரணை தொடங்கும் - உலக சுகாதார நிறுவனம்
By: Monisha Wed, 27 May 2020 11:57:46 AM
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இதற்கிடையே, சீனாவின் வுகான் நகரில் உள்ள வைராலஜி ஆய்வுக்கூடத்தில் தான் வைரஸ் உருவாக்கப்பட்டது என்று அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் சீனாவுக்கு எதிராக குற்றம் சாட்டி வருகின்றன. சீனா அதனை மறுத்து வருகிறது.
இந்நிலையில் கொரோனா எப்படி உருவானது என்பது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என உலக நாடுகள் மற்றும் சர்வதேச விஞ்ஞானிகள் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். முதலில் விசாரணைக்கு மறுத்து வந்த சீனா தற்போது ஒத்துழைப்பதாக கூறியுள்ளது. மேலும் இந்த விசாரணை பாரபட்சமற்றதாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
சீனா விசாரணைக்கு ஒத்துழைப்பதாக கூறியதற்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இயக்குனர் மைக்கேல் ரியான் ஜெனீவாவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சீனாவின் அறிவிப்பை வரவேற்கிறோம். சீன அதிகாரிகளும், உலகம் முழுவதும் உள்ள அரசுகளும், நாங்களும் கூட இந்த வைரஸ் எப்படி உருவானது என்பதை அறிய ஆர்வமாக இருக்கிறோம். இந்த விசாரணை குழுவில், பல நாடுகளை சேர்ந்த விஞ்ஞான நிபுணர்கள் இடம்பெற வேண்டும். இந்த விசாரணை திருப்திகரமாக அமையும் என்று நம்புகிறோம். விசாரணை தொடங்குவதற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. கூடிய விரைவில் விசாரணை தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.