நீலகிரி வனப்பகுதியில் 4 புலி குட்டிகள் இறந்தது குறித்து விசாரணை
By: Nagaraj Thu, 21 Sept 2023 11:00:35 PM
ஊட்டி: ஊட்டி, நீலகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட சின்னக்குன்னூரில் 4 குட்டிகளுடன் புலி சுற்றித் திரிவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 3 புலிக்குட்டிகள் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் ஒரு புலிக்குட்டி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. ஆனால் அந்த புலியும் சிறிது நேரத்தில் இறந்து விட்டது. மேலும் நீலகிரி வனம் மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 புலிகள் இறந்துள்ளது வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, உயிரிழந்த குட்டிகளின் தாய் புலியின் நிலை இதுவரை தெரியவில்லை. வனத்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேசன் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 40 நாட்களில் 4 வயதான புலிகள், 6 குட்டிகள் உட்பட 10 புலிகள் இறந்துள்ளன. ஆகஸ்ட் 16-ம் தேதி சீகூர் வனப்பகுதியில் உள்ள ஓடை அருகே 2 புலிகள் இறந்து கிடந்தன. அதை ஆய்வு செய்தபோது அவை தாய்ப்புலியால் கைவிடப்பட்டது தெரியவந்தது.
ஆகஸ்ட் 17 அன்று, நடுப்பகுதியில் ஒரு புலி இறந்து கிடந்தது. புலியின் உடலில் உள்ள காயங்களை ஆய்வு செய்ததில், மற்றொரு புலியுடன் சண்டையிட்டு இறந்தது தெரியவந்தது. இதேபோல் ஆகஸ்ட் 31-ம் தேதி புலிகளுக்கு இடையே நடந்த சண்டையில் ஒரு புலி இறந்தது.
கடந்த 9-ம் தேதி அவலாஞ்சி உபரி நீர் ஓடை அருகே 2 புலிகள் இறந்து கிடந்தன. இந்த புலிகள் மாட்டிறைச்சியில் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் உடல் உறுப்புகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதற்கட்ட விசாரணை நடத்தி சேகரை கைது செய்துள்ளோம்.
கடந்த 14-ம் தேதி சின்னக்குன்னூரில் புலிக்குட்டிகள் நடமாடுவதாக கிடைத்த தகவலின் பேரில் வல்லுனர்களை அனுப்பி புலிகளை தேடும் பணி நடந்தது. அடர்ந்த வனப்பகுதியில் 3 புலிக்குட்டிகள் இறந்தும், ஒரு புலிக்குட்டி உயிருக்கு போராடியும் கண்டெடுக்கப்பட்டது.
அதை மீட்டு சிகிச்சை அளித்த போது குட்டியும் இறந்தது. இறந்த குட்டிகளை பரிசோதித்ததில், நான்கு குட்டிகளும் உணவின்றி இறந்தது தெரியவந்தது. அவர்களின் உடல் உறுப்புகளின் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. புலிக்குட்டிகள் இறந்து கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் கடமான் உடல் பாகங்களும் மீட்கப்பட்டன. அதன் மாதிரியை ஆய்வகத்துக்கும் அனுப்பியுள்ளோம். மேலும் குட்டிகளின் தாய்ப்புலியை தேடும் பணியும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.